Friday, December 15, 2017

கிராமத்து சொர்க்கம்
-------------------------------------
 காலையில் எழுந்து  
அவசரங்கள்  ஏதுமின்றி  
அன்றாட வேலைகளை  
முடித்தவிட்டு....

ஆலமர நிழலமர்ந்து
ஆசுவாசமாய் கதையளந்து
பஞ்சாயத்து பேசிவிட்டு....

சிறுபிள்ளை போலே
இனிப்பு நீர் ஒழிகிட
நாவூறும் தேன்மிட்டாய் ருசித்து.....

எட்டிப்பறித்த புளியங்காயை
நண்பர்களோடு சுவைக்கையிலே
உச்சிமண்டையில் ஏறுமே புளிப்பு...  

எட்டு ஊரு மணக்க
கல்சட்டியில் ஆச்சி வைக்கும்
கருவாட்டுக் குழம்பும்
கைகுத்தல் அரிசி சோறும்
வேகும்போதே வாசம் வீசுமே ...

நிலாச்சோறு சாப்பிடவே
வட்டமாய் வந்தமர
அன்பு கூட்டிப்பிசைவாளே அம்மாவும்
ஆளுக்கொரு உருண்டை வாங்கி
நெஞ்சு நிறைய உண்டு களித்து
தென்னங்கீற்றின் அசைவினிலே  
தென்றல் வந்து தாலாட்ட
கண்ணயர்ந்தால்.....
ஆகா.......
சொர்க்கமாய் இனிக்குமே...

 அலைப்பேசியில்  அளவளாவி
பணம் தேடும் பிணங்களாகி
அடுத்தவர்   துயரை
அறிந்திடாது போகின்ற 
நகரத்து வாழ்க்கையிலே
எங்கப்பா சொர்க்கமிருக்கு...?