Friday, June 11, 2010

இந்தியாவின் இயற்கை வளங்கள் என்ன அம்பானிகளின் சொத்தா?

ஒளரங்கசீப் காலத்திற்கு பிறகு சகோதர சண்டை அம்பானி சகோதரர்களால் கவனம் பெறுகிறது. தந்தை, சகோதரர்கள் சிறை வைக்கப் பட்டு கொல்லப் பட்டது அந்த காலம். நாடே சிக்குண்டு திணறுவது இந்தக் காலம். தந்தை திருபாய் அம்பானி உயிரோடு இருந்த போதே பூசல் துவங்கிவிட்டது.உயில் என்று எதுவும் எழுதாமல் உயிரை விட்டார் திருபாய். தாயார் கோகிலா பென் அழுது, புலம்பி, மிரட்டி மற்றும் பல நூதன உபாயங்களை கையாண்டு ஒருவகையில் அவர்களை சமாதானம் செய்தார். இவர்களது பிரச்சனை வீட்டை விட்டு நாட்டை தாக்கும் போது, வரி செலுத்தும், வரி செலுத்தாத, ஒரு வேளை சோற்றுக்கும் வழி இல்லாத ஒவ்வொரு குடி மகனும் பாதிப்புக்கு உள்ளாகிறான். தற்போது பூதாகாரமாக எழுந்திருக்கிறது எரி வாயு பிரச்சனை.


மறைந்த திருபாய் அம்பானிக்கு இரு பிள்ளைகள். மூத்தவர் முகேஷ் , இளையவர் அனில். இருவருக்கும் கோடிக் கணக்கில் சொத்துக்கள் உள்ளது. உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கும் இந்தியர். இப்படி வானளாவிய பெருமை கொண்ட இவர்களை நம்பி கோடிக் கணக்கான மக்கள் தங்களது குண்டுமணியளவு பணத்தையும் பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்து நாங்களும் ரிலயன்ஸ் பங்குதாரர்கள் என இருமாந்து உள்ளனர்.இந்தியாவின் அனைத்து பெரு வணிகத்திலும் கால் பதித்த இவர்கள் தற்போது எரி வாயு துறையில் கால் ஊன்றி உள்ளனர். இந்திய இயற்கை வளங்களில் "எரிவாயுத் துறை" அதிகம் பணம் ஈட்டக் கூடிய துறை. பலத்த போட்டிகளுக்கு இடையே ரிலயன்ஸ் கம்பெனிக்கு இந்த காண்ட்ராக்ட்
கிடைத்துள்ளது.
மத்திய அரசு ஆற்றுப் படுகைகளில் எந்தெந்த இடங்களில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது என்பதை கண்டறிய என்.இ. எல்.எஃப் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. அது தரும் அறிக்கையின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதற்கு "நியூ எக்ஸ்ப்ளோரேஷன் ஆஃப் லைசன்ஸிங் பாலிஸி" என்று பெயர்.அதன் அடிப்படையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு அனுமதி கிடைத்தது.அனுமதியின் பேரில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா- கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு எடுக்க மிக தீவிரமான முயற்சியில் இறங்கினார் முகேஷ்.இந்த படுகையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இயற்கை எரிவாயு உள்ளதாக என்.இ.எல்.எஃப் கூறுகிறது.
ரிலயன்ஸ் நிறுவனம், தனது சகோதரரின் ரிலயன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு 17 வருட காண்ட்ராக்ட் அடிப்படையில் எரிவாயு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தது. அரசு நிறுவனமான என்.டி.பி.ஸி(நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன்)க்கும் சப்ளை செய்ய ஒத்துக்
கொண்டது.அனிலின் நிறுவனம், உ.பி.யில், தாத்ரி என்ற இடத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ளது.இதற்கு நாள் தோறும் 23,மில்லியன் மெட்ரிக் ஸ்டேன்டர்ட் கியூபிக் மீட்டர் வாயு சப்ளை செய்ய வேண்டும். இதை 2.34 பிரிட்டீஷ் தெர்மல் யூனிட் அளவாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. உலக அளவில் பெட்ரோலியம், வாயு உற்பத்தியில் ஏற்பட்ட விலை நிர்ணய ஏற்ற இறக்கங்கள் குழப்பத்தை உண்டாக்கியது. இங்குதான் துவங்கியது பிரச்சனை.
ரூ112.80 என மத்திய அரசு நிர்ணயித்த விலை நாளடைவில் ரூ 201 ஆக அதாவது டாலர்கணக்கில் 4.2 ஆக உருமாறியது.சர்வதேச சந்தையில் கடந்த ஜூலை மாதம் 2.30 டாலர், 3.30 டாலராக விலை ஏறியது. நிரந்தர மற்ற விலை ஏற்ற இறக்கங்கள் கொடுக்கல், வாங்கல்
பிரச்சனையானது. மத்திய அரசு நிர்ணயித்த பழைய விலைக்குதான் தர வேண்டும் என்ற அனிலின் கோரிக்கையை நிராகரித்தார் முகேஷ். புதிய
விலை நிர்ணயம் செய்யலாம் என்றார் .இது ஒப்பந்த மீறல் என்றுகண்டித்தார் அனில்.இந்த பஞ்சாயத்தை கன்னத்தில் கை வைத்தபடி பார்த்தது மத்திய அரசு. ப.சிதம்பரம், அவர்களது குடும்ப பிரச்சனை என்றார். முரளி தியோரா பிரச்சனை ஏற்படாமல் இருக்க தேசியமயமாக்கலாம் என்றார்.பின்னர் தான் அவ்வாறு கூறவில்லை என மறுத்தார். பொது நல அமைப்பும் ,இயற்கை வள நல ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். பிரச்சனை முற்றாமல் இருக்க அரசு நிறுவனமான என்.டி.பி.ஸிக்கு தினமும் 12 மில்லியன் மெட்ரிக் இயற்கை எரிவாயு தருவதாக ஒப்புக் கொண்டார் முகேஷ். தன்னால் தர இயலாத பட்சத்தில் வெளியில் இருந்தாவது வாங்கி தருவதாக கூறினார்.



தற்போதைய நிலையில் அனிலுக்கு ஒரு யூனிட் ரூ110 சப்ளை செய்யும் பட்சத்தில் உற்பத்தி விலையில் 40 சதம் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் வருடத்திற்கு 1லட்சம் கோடி தனது நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும். இதனை ஒரு போதும் தன்னால் அனுமதிக்க முடியாது என
திட்ட வட்டமாக மறுக்கிறார் முகேஷ்.இந்த உடன் பாடு சரி செய்யப் பட்டால் அனிலுக்கு வருடத்திற்கு 75 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும். மேலும் குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்கலாம். தனது நிறுவனங்களுக்கு தங்கு தடை இல்லாமல் சப்ளை செய்யலாம் என மன கணக்குகள் குறுக்கும் நெடுக்குமாக ஓட பிரச்சனை நீதி மன்றம் சென்றது.வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், கையொப்பம் இட்ட படி எரிவாயு சப்ளை செய்ய
முகேஷிற்கு கட்டளை இட்டது."நாட்டாமை தீர்பை மாத்தி சொல்லு" என உச்ச நீதி மன்றம் சென்றார்.
தற்போது என்.டி.பி.ஸிக்கே 4.2 டாலர் விலையில் தன்னால் அளிக்க முடியுமா? என சந்தேகம் எழுப்பியுள்ளார். முடியுமா?முடியாதா? என்பதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கும் , அரசியல் வாதிகளுக்கும் தெரிந்த நிலையில் பொதுமக்களாகிய நாம் பாதிக்கப் படுகிறோம் என்ற உணர்வில்லாமல்,ஏதோ கிரைம் படம் பார்ப்பது போல அன்றாட தினசரிகளில் வரும் துண்டு செய்திகளை படித்து விட்டு ,வாய் கிழிய பேசி நம் அறிவு ஜீவி தனத்தை மற்றவர்களிடம் பறைசாற்றி விட்டு ஏமாந்து கொண்டிருக்கிறோம்.என.டி.பி.ஸிக்கு தர்ம சங்கடம், நெருக்கடிகள் அதிகரிக்க தானும் தன் பங்கிற்கு உச்ச நீதி மன்றம் சென்றது. நாமிருவரும் சமாதானம் செய்து கொள்வோம், என முகேஷ் பழம் விட்டார் .உலக வரலாற்றில் முதன் முதலாக தனியாருடன் அரசு நீதிமன்றத்தை புறக்கணித்து விட்டு சமரசம் பேச துவங்கியுள்ளது.இதற்கு அரசியல் தலை ஈடுகளே காரணம்.
அனிலும் சரி முகேஷூம் சரி அரசியல் பல மிக்கவர்கள். முகேஷ், காங்கிரஸையும் ,பி.ஜே.பி யையும் அழைத்து வந்தால் ,அனில், அமிதாப்பையும், சமாஜ்வாடியையும் அழைத்து வருகிறார். காங்கிரஸோடு தனக்குள்ள பூசலை அனில் பிரச்சனையில் ஏற்றி குளிர் காய்கிறது சமாஜ்வாடி கட்சி.அதிரடி திருப்பமாக ,அரசோடு முகேஷ் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம் செல்லாது,அதன் பின்னால் பல சதிகளும், கையூட்டும் உள்ளதாக தனது நிறுவன அதிகாரி பிரசாத் மூலம் எல்லா பத்திரிக்கைகளுக்கும் அறிக்கை மூலமாக விளம்பரப்படுத்தினார் அனில். இப்பிரச்சினை இப்போது மன் மோகன் சிங் வரை சென்றுள்ளது.கம்யூனிஸ்ட்கள் குரல் எழுப்புகின்றன.தனி மனித பிரச்சனைக்கு பிரதமரின் தலை யீடு தேவைதானா? என்ற குரல் எங்கும் ஒலிக்கிறது. படுகை பகுதியில் தனது அண்ணன் 45 ஆயிரம் கோடி செலவிட்டதாக பொய் கூறுகிறார். இதை மத்திய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் ,என்ற அனிலின் வேண்டுகோளுக்கிணங்க பிரதமரின் ஆணைப்படி ,இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஆய்வு மேற் கொண்டார்.அலுவலகத்தில் அனைத்து கணக்குகளும் மாயமாகிப் போனது.திடுக்கிட்ட அதிகாரி, வெறும் கையோடு வந்ததற்கு, ஒரு கப் "சாயாவும் சமோசாவும்" சாப்பிட்டுவிட்டு அலுவலகம் திரும்பினார்.
தனிமனிதரான முகேஷ் எப்படி கிருஷ்ணா-கோதாவரி படுகையில் வாயு வளம் இருப்பதாக கண்டறிந்து தெரியப்படுத்தினார்.அரசு செய்ய வேண்டிய ஆய்வை இவரால் எப்படி நடத்த அனுமதிக்கப்பட்டது? இது முதல் கேள்வி. இரண்டாவதாக, மிக குறைந்த விலையில் தயாரிக்கப்படும்
மின்சாரம் பொது மக்கள் உபயோகத்திற்கு தருவாரா? அல்லது அனில் தானே வைத்துக் கொள்வாரா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் நம் மனதில் எழுகிறது .பதில் தான் இல்லை!!
1960 களில் குஜராத்தில் எண்ணை வளம் கண்டறியப்பட்ட போது அப்போதைய பிரதமரான நேரு அங்கு நேரில் சென்று உறுதிபடுத்திக்
கொண்டு பாராளுமன்றத்தில் அறிவித்தார். அந்த நேர்மை தன்மையும், உண்மை தன்மையும் தற்போது என்னவானது? இயற்கை வளங்கள் குறித்து சரியான பாதுகாப்பு சட்டங்களோ, அறிக்கைகளோ அல்லது விழிப்புணர்வோ இல்லாமையால் ஆங்கிலேயரை நம் நாட்டிற்குள் கொண்டுவந்து சேர்த்தது. இப்போது அவர்கள் போய், நம்மவர்களே கொள்ளையடிக்கும் தொழிலில் இறங்கி விட்டனர்.புதையல் என்ற பெயரில் கடுகளவு தங்கத்தையோ கட்டைவிரல் அளவு சிலையையோ சாமானியன் எடுத்தால் அவனை தேடி போலீஸ், தணிக்கை அதிகாரி, அகழ்வாராய்ச்சி அதிகாரி என ஒரு படையே வரும். அம்பானியும், டாட்டாவும், பிர்லாவும் புதையல் கொள்ளையில் ஈடுபட்டால் மானியம் தந்து மலர் சூடுகிறது இந்த அரசு! இத்தகைய நிகழ்வுகள்
"அக்கிரமங்களை நியாயப்படுத்தும் காலமிது" என்ற ஜார்ஜ் ஆர்வலின் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.
அன்றாடம் அம்பானிகள் வணங்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் தான் அவர்களுக்கு நல்ல புத்தி தர வேண்டும்."காசு எங்களுக்கு லட்டு உங்களுக்கு "என்று பொது மக்களை ஏமாற்றி விடாதீர்கள் என்ற அறிவுரையையும் அவர் தான் வழங்க முடியும்.
kannan233@gmail.com எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
Best regards,
--
walk without feet fly without wings think without mind

மாடியில் மலரும் தாமரை தடாகம்

உயிர்மை இதழில் வெளி வந்த கட்டுரை இது


அப்பாவுக்கு நிறைய தோட்டங்களும், வயல் வெளிகளும் இருந்தன. குடும்ப சூழலும், காலத்தின் இறுக்கமும், அவைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்தன. என் சிறுவயது தொட்டு என்னோடு வளரும் கனவுகளில் தோட்டமும் ஒன்று.அது என் ஆசைக்கும்,விருப்பத்திற்கும் ஏற்ப அனைத்தையும் கொண்டிருக்கும். மீதமுள்ள இடங்களையும் அப்பா விற்றதில் ,நிழல் போல் கூடவே வரும் தோட்ட கனவு காயத்தோடு தங்கிப் போனது.அப்பாவும் தன் குடும்பத்தின் எதிர்காலத்தை எண்ணி அரசு துறை அதிகாரி ஆனார். அப்போது பஞ்சாயத்து யூனியன் என்பது
மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருக்கும். மாவட்டங்களின் எண்ணிக்கையும் குறைவே. பி.டி.ஓ அலுவலகம் ஏதாவது ஒரு கிராமத்தின்
கடைசியில் இருக்கும். வீடும் அங்கேயே இருக்கும். கிட்டத்தட்ட மாவட்ட நிர்வாகம் இவரது கையில். எங்கள் வீடு அவ்வாறு அமைந்த என்று. அதற்கு அடுத்து குளமோ அல்லது ஊரணியோ இருக்கும். சுற்றிலும் கம்பு, கேப்பை ,சோளம் விதைத்திருப்பார்கள். பக்கத்தில் சுடுகாடு இருக்கும். அங்கு பெரிய மீசையும்,உருட்டு கண்களும்,ஆளுயர அறுவாளுமாக சுடுகாட்டு ஐயனார் காட்சி தருவார். அவருக்கு தினமும் சுருட்டு, சாராயம்
போன்ற லாகிரி வஸ்துக்கள் வேண்டும். அவ்வப்போது அசைவ படையலை உண்டு தன் உடலை பலப் படுத்தி கொள்வார்.என்னை போன்ற சைவ வர்க்கத்தினர் செய்யும் கைமாறு அவருக்கு எண்ணை தீபம் ஏற்றுவது தான் .அங்கு போகவே பயமாக இருக்கும். வயல் வெளியில் ஜில்லென ஒலி எழுப்பி பறக்கும் குட்டி குட்டி பறவைகளும், ஆங்காங்கே பூத்திருக்கும் காட்டு மலர்களும் எனக்காகவே காத்திருக்கும் தேன் பூவும், அதில் வந்தமரும் வண்ணத்துப்பூச்சிகளும் அந்த இடத்தை என் விருப்ப இடமாக மாற்றியது.
ஒரு நாள் இரண்டு கட்டு கொண்ட ஓட்டுக் குடியிருப்புகள் உருவாக ஆரம்பித்தன. சம்பிரதாயமாக இல்லாமல் ஆண் சட்டையும், பாவடையும்,
அணிந்த லேசான கருமை நிறமான பெண்களும், பறட்டை தலையும், பிளாஸ்டிக் குடங்களும், கிறீச்சிட்ட சைக்கிளோடு ஆண்களுமாக 50 குடும்பங்கள்குடியேறின. இலங்கையிலிருந்து வந்துள்ளோம் என்றனர். அங்கிருந்த யாழினி அக்கா எனது உற்ற தோழி ஆனார். அழகாக சிரித்து
அதிராமல் நடப்பார். அவர் வீட்டுக்கு எதிரே வைத்த செடி வெகு சீக்கிரம் மரமானது. அது சிவப்பு பூ பூக்கும். கொக்கி போல் வளைந்த இதழ்களை கொண்டது. மகரந்த தண்டுகள் வளர்ந்து வெளி நோக்கி தொங்கும். பார்த்தவுடன் பறிக்க ஆசையை தூண்டும். யாழினி அக்காவும் பறித்து கொடுத்தார். இது " காந்தள் மலர். எங்கட நாட்டு தேசிய பூவாக்கும் " என சிரித்த படி கொடுத்தது என் ஞாபகத்தில் கரையாமல் உள்ளது. 'ஃப்ளேம் ஆப் தி பாரஸ்ட்' பூக்களை கண்டால் அதில் யாழினி அக்காவின் அழகிய சிரித்த முகம் தெரியும்.
1984ல் நான் தேனி நகரில் குடியேறிய போது என் தோட்ட கனவு மாடி தோட்ட கனவாக உருமாறியது. எங்கள் குடும்பம் மாடியில் குடியேறயது.2000 சதுர அடியில் மொட்டை மாடி உள்ளது. மிக சிறிய அளவில் தோட்டம் அமைக்க தொடங்கிய நான் இன்று ஆயிரக் கணக்கான மரம் ,செடி ,கொடிகளை கொண்ட பெரும் தோட்டத்தை கண்டு மகிழ்கிறேன். பல வகை வண்ணத்துப் பூச்சிகளும், சிறிய பறவைகளும்,
மிருகங்களும், அவ்வப் போது வருகை புரியும் குரங்கினங்களுமாக மிக பெரிய குடும்பமாக பரிணமித்துள்ளது. என் மனைவி ரஞ்சனாவின் அயராத உழைப்பும்,கண்காணிப்பும் தோட்டத்தை மலரச் செய்துள்ளன.என் படுக்கை அறையின் அருகில் அவள் அமைத்த தாமரை தடாகம் இன்றும் பலரது புருவத்தை உயர்த்தும். அதில் மலரும் அல்லிப் பூவின் மென்மையான வாடை என் அதிகாலை பொழுதை இனிமையானதாக்கும். அதில் துள்ளி
விளையாடும் வண்ண மீன்கள் காண்போரை கவரும், என் மனதிற்கும் அமைதியை தரும்.
நூற்று கணக்கான பானைகள், தொட்டிகள், சிமெண்ட் பைகளிலும் செடிகள் வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைக்கான அனைத்து காய்கறிகளும் உண்டு. தேவைக்கு போக மீதமுள்ளவை விற்பனை செய்யப்படும். அதற்கு மவுசு அதிகம். தக்காளி, வெண்டி, கத்தரி ,மிளகாய் போன்றவை எப்போதும் உண்டு. ஊடு பயிராக இஞ்சி, பூண்டு, வெங்காயம் நடப்படும். காலப் பயிராக புடலை, பூசணி, பாகல் போன்ற கொடி வகைகளும் உண்டு.
கேரட் ,பீட்ருட், நூக்கோல், காலுபிளவர் போன்றவை கட்டுப் படுத்தப்பட்ட வெப்ப சூழலில் பயிரிடப்படும். 10க்கும் மேற்பட்ட கீரை வகைகளும் உண்டு. நிழல் வலை அமைக்கப் பட்டு,இன் -டோர், அவுட்-டோர் அலங்கார செடிகள் வளர்கப்படுகிறது. இங்கு 150 வகை அலங்கார செடிகளும், சுவர்களில் ஒட்டி வளரும் கிரீபர் இனங்களும் உண்டு. நன்றாக வெயில் படும் இடத்தில் கள்ளி இனங்கள் வளர்க்கப்படுகின்றன. 15கும் மேற்பட்ட வகை உண்டு. 10வருடமான பந்து வடிவ கள்ளி என் மனைவிக்கும், அடினா வகை கள்ளி பூ என மகளுக்கும், 25 வருட பழமையான மான் செவி கள்ளி எனக்கும் 'ஃபேவரட்.'
எனது தோட்டத்தில் முக்கனிகளின் சுவையோடு ,கொய்யா, மாதுளை, சப்போட்டா,சாத்துகுடி,சிம்லா செரி போன்றவையும்,வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் கிராம்பு, மகிழம், செண்பகம், மரிக்கொழுந்து, போன்றவையும், எலுமிச்சை, நாரத்தையும் அபூர்வ இன மரங்களான செந்தூரம் (குங்குமம் தயாரிக்க பயன்படும்), சில்வர் ஃபாலும் , காதல் உணர்வை தூண்டும் மணம் கொண்ட மகிழம் ,புன்னை, நாகலிங்கம் போன்ற மரங்களும் உண்டு. அதுமட்டுமல்லாமல் 1000வருடம் வாழும் மரங்களான ஆல், அரசு, இச்சி, போன்றவை 'போன்சாய்' வகையாகவும் உள்ளது.
இவையெல்லாம் சிமெண்ட் தொட்டிகளிலும், இரும்பு டிரம்களிலும் வளர்க்கப் படுகின்றன. முல்லை, மல்லி ,ரோஜா, கொடிசம்பங்கி ,நில சம்பங்கி
அரளி போன்ற வருவாய் தரக்கூடிய ஏராளமான பூச் செடிகளும் உண்டு.
காந்தி கிராம பல்கலைகழகத்தின் முன்னாள் ஆலோசகரும், அதன் மருத்துவ நிறுவனமான லக்ஷ்மி சேவா நிலையத்தின் வழி நடத்துனரும்,எனது பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி உயர் திரு. ஆர்.எஸ் .நாராயணன் எனது குருநாதர் ஆவார்.இவர் இயற்கை முறையில் விவசாயம் செய்வது தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் தினமணியிலும் மற்றும் நூல்களாகவும் வெளி வந்துள்ளன. இயற்கை முறையிலேயே தனது தோட்டத்திலும் விவசாயம் செய்து வெற்றியும் பெற்றிருக்கும் இவரது சீரிய வழிகாட்டலே எனது தோட்டம் செழுமை பெற முக்கிய காரணமாகும்.
தோட்டக் கலை பொறியியல் அலுவலகம் நடத்தும் பயிற்சிகளுக்கு என் தோட்டம் ஒரு களமாகவே உள்ளது. மேலும் பலரும் என்னிடம் வந்து
மாடி தோட்டம் தொடர்பாக தங்களது ஐயங்களை தீர்த்துக் கொண்டு செல்கிறார்கள், அதனால் பலனும் அடைகிறார்கள். எனது தோட்டத்தை
பார்வையிட வரும் தோட்டக் கலை அலுவலர்கள், பேராசிரியர்கள் ,மகளிர் குழுக்கள் போன்றோர் வரும் போது கேட்கும் ஒரே கேள்வி "நீர் படுவதால் தரை சேதமடையாதா? வீடு ஒழுகாதா?"என்பதே.சரியான வடிகால் வசதி செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக சேதம் அடையவே அடையாது.
இயற்கை வேளாண்மையில் சூரிய ஒளியையும், நீரையும் சரியான அளவில் பயன் படுத்தும் போது வெற்றிக் கனி நம் கையில் தவழும்.மண்புழு உரம், பஞ்ச கவ்யம், குணபம் போன்ற இயற்கை வேளாண் இடுபொருட்கள் மூலமாக செடிகளின் அத்தியாவசிய அடிப்படை தேவையை 90 சதவீதம்
வரை பூர்த்தி செய்யப் படுகிறது.பஞ்ச கவ்யமே பூச்சி கொல்லியாகவும் செயல் படுவதால் பூச்சி மருந்துகளுக்கு வேலையே இல்லாமல் போகிறது.
இயற்கை இடுபொருட்களை நாமே தயார் செய்யலாம்.சற்று உழைப்பும், பொறுமையும்,வேண்டும் ."ஆப்ரிகன் யுஜினா" எனப்படும் மண் புழுவை பயன்படுத்தி சாண எருவிலிருந்து மண்புழு உரம் 40 நாட்களில் தயாரிக்கப் படுகிறது.வீட்டில் மிஞ்சும் பால், தயிர் ,வீணாகும் சிட்ரஸ் அல்லாத பழங்கள், நெய், தேன், மண்டை வெல்லம் கொஞ்சம் சாணம், கோமியம் ,தண்ணீர் கலந்து இறுக்கமாக மூடி வைத்திட 45 நாட்களில் அற்புத சக்தி
மிக்க பஞ்ச கவ்யம் தயாராகிவிடும். அவ்வப்போது திறந்து கிளறி விடுவதால் மீதேன் வாயு வெளியேறிவிடும்.இதை 100 லிட்டர் தண்ணீருக்கு 2 முதல் 4 லிட்டர் மட்டும் கலந்து மேலுரமாகவும், அடிஉரமாகவும் உபயோகிக்கலாம்.
மண்ணின் வளமே செடியின் ஜீவ நாடி. அது சரியாக இருக்கும் போது செடி செழிப்படைகிறது. மண்ணானது கறுப்பு நிறத்தில் இருந்தால் தான் அதில் 'ஹியூமஸ் ' எனும் அங்கக சத்து முழு அளவில் இருக்கும். மாடியின் ஓரத்தில் நிழல் தர தட்டி அமைத்து அதன் கீழ் சாணம்,இலை தழை,
மிஞ்சிய உணவு பொருட்கள் ,காய்ந்த பூக்கள் போட்டு அதில் சில மண்புழுக்களை விட அவை மக்கிய தொழு உரமாக மாறும். பின் இதை செம்மண், மணல், கரம்பை மண் கலந்த கலவையோடு 1:2 என்ற விகிதத்தில் கலக்க மிகச் சிறந்த சத்து மிக்க அடி மண் தயாராகும். தொட்டிகளில் முதலில் நீர் வடிவதற்காக சிறு துளை இட வேண்டும். அதை ஓடு கொண்டு மறைத்து வடிகால் வசதி செய்ய வேண்டும். அடியில் காய்ந்த இலை சருகுகள் இட்டு அதன் மேல் மண் நிரப்பி செடிகளை நட வேண்டும். நட்ட பின் மேல் மண்ணை வைக்கோல் அல்லது ரன்னர் வகை செடிகளை கொண்டு மூடி விட வேண்டும். இதுவே "மல்ச்சிங்" அதாவது மூடாக்கு எனப்படும்.
யானைகளைப் போல் குரங்குகளுக்கும் 'வலசை' பாதை உண்டு. அதன் பாதைக்கு அருகில் அவை உண்பதற்காக தக்காளி, பப்பாளி, கொடுக்காபுளி போன்றவற்றை வைத்து விட்டால் அவை அதை மட்டும் உண்ணும், மற்ற செடிகளை அவை சேதமாக்காது. அதுபோல கர்ப்ப காலத்தில் உள்ள அணில் ,பறவைகள் போன்றவைக்காக செடிகளை ஒதுக்கி வைத்து விட்டால் பிற செடிகளை அவை பாழாக்காது. செரிவூட்டப்பட்ட இயற்கை உரங்களை அளிக்கும் போது பெரு மரங்கள் அதிக காய்ப்புத் திறனை பெறுகிறது.
1947 ஜூலை மாதம் முதன் முதலில் மரம் நடும் வாரம் தொடங்கப்பட்டது. தில்லியில் உள்ள புரானாக்கிலா மைதானத்தில் செம்மந்தாரை மரக் கன்றுகளை நட்ட பின் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு " வளரும் மரங்கள் நாட்டின் உயிர்துடிப்பின் சின்னம், மரம் வெட்டுவதை தடுக்க சட்டம் வேண்டும், ஒருமரத்தை நட்ட பின்தான் பட்ட மரத்தை வெட்ட வேண்டும்" என்று கூறினார்.
மண்ணும் மரமும் நம்மை ஒருபோதும் ஏமாற்றாது .இயற்கை அளித்த அட்சய பாத்திரங்கள் செடிகள். அதை நாம் என்றும் பேணிக் காத்திட வேண்டும். தினமும் யோகா, உடற் பயிற்சி செய்தல், கோவிலுக்கு செல்லுதல் போன்றவற்றோடு செடிகளை வளர்ப்பதற்கும் நம் அன்றாட வாழ்வில் இடம் தர வேண்டும்.அறம், பொருள், இன்பம், வீடு என்ற மனித நெறிகளை மரங்கள் வழங்குகின்றன.இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் மரங்களை நட வேண்டும். இந்த பூமியில் அவைகள் எல்லையில்லா மகிழ்ச்சியை வழங்குகின்றன. அவை நம்மை வறுமையிலிருந்தும் காக்கின்றன.
அதனால் "ரட்சகன்"என்று அவைகள் அழைக்கப் படுகின்றன. ஆனால் இன்றைய இயந்திர உலகில் நிஜப் பூக்களின் வாசனையை நுகர
நேரமில்லாமல் பிளாஸ்டிக் பூக்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் சுவற்றில் ஒட்டி அழகு பார்த்துக் கொண்டு சொர்க்கத்தை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம். என்னிடம் சொர்க்கம் எங்கே என்று கேட்கும் போதெல்லாம் என் பதில், " என் வீட்டு மாடியில்".
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.