Friday, June 4, 2010

தடம் மாறும் பெருங்கையன்

மே மாதம் 24 தேதி உயிரோசையில் வெளிவந்துள்ள கட்டுரை இது.

வேழம் ,பூழ்க்கை,பெருங்கை, களிறு(ஆண்),பிடி(பெண்) என பலவேறு சொல்மாலைகளை சூடிக் கொண்டிருக்கும் யானைகள் என்ற பேருயிர் இனம், தன் தடங்களை (corridors) தொலைத்துவிட்டு அலைந்து வருகிறது.மனிதனுக்கும், யானைக்குமான வாழ்விடப் போராட்டம் ,அதன் தொடர்பான உணவுப் போராட்டம் கடுமையான திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தாலும் அது யானைகள் பக்கம் குற்றமுள்ளதாக, செய்திகளை பத்திரிக்கைகளும் ,தொலைக்காட்சிகளும் பெரிது படுத்தி வெளியிடுகின்றன. இது மேலும் யானைகள் குறித்த அவநம்பிக்கையை வளர்க்கிறது.


யானைத்தடம் நேர் கோடானது. இது ஓரிடத்திலிருந்து அடுத்த வசிப்பிடத்திற்கு செல்லும் இணைப்புப் பாதையாக அவை செயல்படும். உலகெங்கும் 25,000 தடம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் மட்டும் 88 தடம் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக 0.5கி.மீ அகலமும், 2கி.மீ நீளமும் கொண்டதாக அவை இருக்கும். இது அவைகளை காடுகளுடனும் ,பிற குழுவை சந்திக்கவும் உதவும். காடு அழிப்பு, நெடுஞ்சாலை அமைத்தல் , காட்டை அழித்து அதை விளை நிலமாக மாற்றுதல், என தன் தடம் இழந்த யானைகள் மனிதனோடும், மனித வசிப்பிடத்தோடும் தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டது. இச்செயல் அவைகளின் இனப் பெருக்கத்தையும், தங்குமிடத்தையும் பெரிதும் பாதித்தது. இந்தியாவில் International Fund for Animal Welfare(IFAW) மற்றும் Wild Life Trust of India(WTI) போன்றவை ,யானைத்தடத்தை கண்டறிந்து அவற்றை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. யானைகள் மட்டுமல்ல ,புலி மற்றும் சிறுத்தை பாதுகாப்பும் இதில் அடங்குகிறது. சுமார் 20 ஆண்டுகளில் சுமார் 50% யானைகள் கொல்லப்பட்டு விட்டன. வீரப்பனும், வீரப்பன் இறந்த பின் பலரும் காட்டழிப்பு, யானை இறப்பிற்கு வழிகோலினர். வாழ்விட அழிப்பில் அல்லலுற்ற யானைகள் ,தங்கள் உறவுமுறை கட்டமைப்பு உடைந்து போவதை தாங்காமல் இறக்கத் துவங்கின.
முதல் முயற்சியாக ,கர்நாடகா மாநிலத்தில் உள்ள பிலிகிரி ரெங்கசாமி கோவில் வனச்சரகத்தை சார்ந்த காடுகளில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. வனத்தை ஒட்டியுள்ள 25.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்கு புதிய காவலர்கள் நியமிக்கப்பட்டு காப்பாற்றும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். IFAW ன் தலைவர் பிரைட் ஓ ரீகன் ,இம்முயற்சி வெற்றி பெற்றதில் தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாகவும், கர்நாடகா அரசு தனக்கு பேருதவி செய்ததாகவும் பாராட்டியுள்ளார்.


உலகெங்கினும் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மலேசியாவில் உள்ள டாமன் நெகாரா வனச் சரணாலயத்தில் செயல்படுத்தப்பட்டு பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 1676 கி.மீ சுற்றளவு கொண்ட இது, பாதுகாக்கப்பட்ட வனச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 631 யானைகள் ஒரே குழுவாக வாழ்கின்றன. ஆசியாவிலேயே அதிகமாக ஒரே குழுவாக இங்கு மட்டுமே யானைகள் நிம்மதியாக வாழ்கின்றன. இதற்கு வன விலங்கு பாதுகாப்பு அமைச்சகம் Department of Wild Life and National Parks(DWNP) உதவுகிறது. இவர்கள் யானைகளின் ஒவ்வொரு அசைவையும் அறிவியல் துணையோடு, செயற்கை கோள் மூலம் ஆராய்ந்து வருகின்றனர். இவர்கள் ஆய்வில் புலி ,சிறுத்தை, குரங்கு, 30 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் ,மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள காட்டு நாய் போன்றவை எண்ணிக்கையில் பெருகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதே போல் 35,000 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்தோனேசியா, டோசோ நிலோ வனச்சரணாலயம் ,தற்போது WWF மற்றும் அரசின் உதவியோடு 86,000ஏக்கராக விஸ்தீரணப் படுத்தப் பட்டுள்ளது. இங்கு 4,000 வகை செடி மற்றும் அரிய வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 2004ல் துவங்கிய இப்பணி தற்போது பலனை தர துவங்கியுள்ளது. 22 கிராமங்கள் தங்கள் நிலங்களை இச்சரணாலயத்திற்காக இழந்தனர். அவர்களுக்கு அளித்த விழிப்புணர்வு பயிற்சியால் கவரப்பட்டு இம்முயற்சிக்கு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட ஆதாரங்களை ஏற்படுத்தி தந்ததோடல்லாமல், 4,000 பேரை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர். 40,000 மக்கள் தொகை கொண்ட மொத்த கிராமமும், சரணாலயத்தை பாதுகாப்பதில் அக்கறையும் , செலுத்தி வருகின்றனர்.



இந்தியாவில் வேறு விதமான நிலைமை உள்ளது. கேரளாவில் மிக அதிக பட்ச யானைகள் கொல்லப்படுவதாக தகவல் கூறுகிறது. மார்க் ஷாண்ட் போன்ற தன்னார்வ சேவகர்கள் தங்கள் சொத்தை விற்றாவது இந்திய யானையை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தோடு முனைந்து வருகிறார்கள் . இவர் எழுதிய "TRAVELS WITH MY ELEPHANTS" மற்றும் "QUEEN OF THE ELEPHANTS" ஆகியவை பெரும் புகழ் படைத்தவை. இவர் டச்சு சீமாட்டியின் தம்பியாவார். இவரின் கூற்றுப்படி ,யானைகள் அதிக உணவு வேண்டுபவை. அவை உண்ணும் உணவின் கால்பகுதி , செரிமானம் ஆகாமல் சாணமாக வெளியேறிவிடும். எனவே அவை உணவை தேடி அலையத் துவங்குகின்றன. இதனால் இவை " பேருயிர் பாலூட்டி வகைகளில் நாடோடி இனமாக" அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வயநாடு பகுதியில் உள்ள திரு நெல்லி பகுதியே சர்ச்சைக்குரியதாகும். இங்கு தான் மனித ---யானை மோதல் அதிகம் ஏற்படுகிறது. யானைத்தடம் அதிகம் உள்ள இப்பகுதி, தற்போது காப்பித் தோட்டமாக மாற்றப்பட்டு காசு கொழிக்கும் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. பன்னெடுங்காலமாக தாங்கள் உபயோகித்த வழித்தடத்தை காணாத யானைகள், காடுகளுக்குள் புகுந்து உணவையும், புதிய தடங்களையும் ஏற்படுத்தியதால் , எதிர்ப்புகளையும் ,துன்பத்தையும் தினமும் சந்தித்து வருகின்றன. இதற்கான தீர்வாக அங்குள்ள தோட்டங்களை தாங்களே விலைக்கு வாங்கி அவர்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து கொடுப்பதன் மூலம் மனித---யானை மோதல் தவிர்க்கப்படும் என்பதை ஷாண்ட் கண்டறிந்தார். இதற்காக WTI ஐச் சேர்ந்த விவேக்மேனனுடன் களத்தில் இறங்கினார் .பெரும் செலவு பிடிக்கும் இம்முயற்சிக்கு ,தன் சொந்த பணத்தை செலவழிக்கத் துவங்கினார்.பலத்த முயற்சிக்கு பிறகு முதல் "மலையாள குடும்ப அகற்றல் பணி " வெற்றி பெற்றது. நான்கு குடும்பங்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அகன்று "திருளக்குன்னு " என்ற இடத்தில் வசிக்க சம்மதித்தனர். அவர்களுக்கு சொந்தமாக வீடு, தோட்டம் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. தாங்கள் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளதாகவும், சேதாரமில்லாத விவசாயம் நிறைய பணம் தருவதாகவும் கூறினர். அதே சமயம் பழங்குடி மக்களை நகருக்குள் இடமாற்றம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் , புதிய கலாசாரத்தையும், சமுதாய சூழலையும் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கபடுகிறார்கள். இம்மக்களை தீண்டத் தகாதவர்களாக எண்ணும் போக்கு கேரளா முழுவதும் விரவி காணப்படுகிறது. குடிநீர் கிணறு கூட அவர்களுக்கு அரசே தனியாக அமைத்து தந்துள்ளது. பீகார் ,ஒரிசா மாநிலங்களுக்கு அடுத்து கேரளாவில் மட்டுமே அதிக ஆதிகவாசி பழங்குடியினர் காடுகளுக்குள் வாழ்கின்றனர். வனத்துறையினர், தீவிரவாதிகள், கொள்ளையடிப்போர் என பலராலும் துன்பத்திற்கு ஆளாகும் இவர்கள், மனதால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களால் மட்டுமே காடுகளுக்கும், அங்கு வாழும் ஜீவராசிகளுக்கும் பாதுகாப்பு தரமுடியுமே தவிர வேறு யாராலும் , குறிப்பாக அரசாலும் கூட தரமுடியாது என்கிறார் ஆதிவாசிகள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட "ஜான் ஹெட்ஜ் வெல்". காடுகளை கையகப்படுத்தும் போது இவர்களையும் அப்புறப்படுத்த வேண்டிய சூழல் பெரும் பிரச்சனைக்கு துவக்கப் புள்ளியாகிறது. தீண்டாமையும் , மூட நம்பிக்கையும் யானைகளை மட்டுமல்ல இப்பழங்குடி மக்களையும் தடம் மாறி ஓடச் செய்துள்ளது. இவர்கள் குறித்த உருப்படியான எந்த செயல் திட்டமும் அரசிடம் இல்லை என்பது தான் வேதனை.


பழங்குடி மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு தேவையான பயிற்சியையும் , விழிப்புணர்வையும் கொடுப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார் லூசிகிங் என்ற ஆய்வாளர். இவர் அவர்களை சிறு சிறு குழுக்களாக அமைத்து காடு பாதுகாப்பு குறித்து பல்வேறு உத்திகளை கற்றுத் தந்தார். இம்முயற்சி நீல கிரி மலைத் தொடர்சியிலும் ,சுந்தர வனப் பகுதியிலும் ,மேற்கொள்ளப்பட்டு பெரும் வெற்றியை பெற்றது. இது யானைகளை தவிர புலிகளையும் பாதுகாக்க பெரும் உதவி புரிந்தது. உண்மையில் அங்கு புலிகள் வாழ்வது மிகச்சிரமம் என்கிறார் உல்லாஸ் கரந்த். தடத்தை பறிகொடுத்த யானைகள் மிகுந்த சிரமத்தோடு வாழ்கின்றன. தங்கள் வாழ்வில் ஏராளமான சரிவான நிலப்பகுதிகளையே அவைகள் கடக்க நேரிடுகிறது. அதை அவைகள் விரும்புவதில்லை. பெரும் உடல் கொண்ட அவை பல சமயம் வழுக்கி விழ நேரிடும் . தண்ணீர் வழிந்தோடி பெரும்பாலான சமயம் சிறு ஓடைகள் வறண்டே காணப்படும். காயம், தாகம், உணவு ,குழுச் சண்டை ,எல்லை மீறல் என தன் வாழ்க்கை முழுதும் ஓட்டத்திலேயே கழிக்கின்றன. இவற்றை தவிர்க்க தங்களுக்கென இருக்கும் பகுதியை அமைதியாக வாழ விடாமல், மனிதன் ஆக்கிரமித்தது தான் அவற்றின் கோபத்திற்கு முதல் காரணம்.

சரிவில் இறங்கி விட்டால் மீண்டும் மேடு ஏறுவதற்கு அதற்கு 100 சதவீதம் சக்தி விரயமாகிறது. அதனால் பின் புறத்தையும் பார்க்க இயலாது. அதிக பட்ச தீங்குகள் அனைத்துமே அதன் பின்புறமே நிகழ்த்தப்படுகிறது. இந்த காரணங்களால் சரிவான பகுதிகளை விட்டுவிட்டு விவசாய நிலங்களை நாடுகின்றன. இதன் காரணமாக பல சமயம் கொல்லப்படுகின்றன.இதனை கருத்தில் கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ,தேன் கூடுகளை வயல் வெளியின் எல்லையில் அமைத்து அதனோடு 8மீ கயிறு இணைத்து அதன் மற்றொரு முனையை அடுத்த கூண்டோடு இணைத்து விடுகின்றனர். கயிறை யானை தட்ட கோபம் கொண்ட தேனீக்கள் யானைகளை கொட்டத்துவங்கும். இதனால் பயந்த யானைகள் அவ்விடத்தை விட்டு அகலும். இம்முயற்சி கென்யாவில் மேற்கொள்ளப்பட்டு பெரும் வெற்றியையும் பெற்றது.
உலகின் அதிசயங்கள் என கல் கட்டிடங்களை காப்பாற்ற முற்படும் நாம், இயற்கையின் இவ்வாறான உயிருள்ள அற்புத அதிசயங்களை காப்பாற்ற முற்பட வேண்டும். அதற்கு தேவையான அடிப்படை விழிப்புணர்வு , குழந்தை பருவம் முதல் கற்றுத்தரப்பட வேண்டும்.
kannan233@gmail.com எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

No comments:

Post a Comment