Friday, June 11, 2010

மாடியில் மலரும் தாமரை தடாகம்

உயிர்மை இதழில் வெளி வந்த கட்டுரை இது


அப்பாவுக்கு நிறைய தோட்டங்களும், வயல் வெளிகளும் இருந்தன. குடும்ப சூழலும், காலத்தின் இறுக்கமும், அவைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்தன. என் சிறுவயது தொட்டு என்னோடு வளரும் கனவுகளில் தோட்டமும் ஒன்று.அது என் ஆசைக்கும்,விருப்பத்திற்கும் ஏற்ப அனைத்தையும் கொண்டிருக்கும். மீதமுள்ள இடங்களையும் அப்பா விற்றதில் ,நிழல் போல் கூடவே வரும் தோட்ட கனவு காயத்தோடு தங்கிப் போனது.அப்பாவும் தன் குடும்பத்தின் எதிர்காலத்தை எண்ணி அரசு துறை அதிகாரி ஆனார். அப்போது பஞ்சாயத்து யூனியன் என்பது
மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருக்கும். மாவட்டங்களின் எண்ணிக்கையும் குறைவே. பி.டி.ஓ அலுவலகம் ஏதாவது ஒரு கிராமத்தின்
கடைசியில் இருக்கும். வீடும் அங்கேயே இருக்கும். கிட்டத்தட்ட மாவட்ட நிர்வாகம் இவரது கையில். எங்கள் வீடு அவ்வாறு அமைந்த என்று. அதற்கு அடுத்து குளமோ அல்லது ஊரணியோ இருக்கும். சுற்றிலும் கம்பு, கேப்பை ,சோளம் விதைத்திருப்பார்கள். பக்கத்தில் சுடுகாடு இருக்கும். அங்கு பெரிய மீசையும்,உருட்டு கண்களும்,ஆளுயர அறுவாளுமாக சுடுகாட்டு ஐயனார் காட்சி தருவார். அவருக்கு தினமும் சுருட்டு, சாராயம்
போன்ற லாகிரி வஸ்துக்கள் வேண்டும். அவ்வப்போது அசைவ படையலை உண்டு தன் உடலை பலப் படுத்தி கொள்வார்.என்னை போன்ற சைவ வர்க்கத்தினர் செய்யும் கைமாறு அவருக்கு எண்ணை தீபம் ஏற்றுவது தான் .அங்கு போகவே பயமாக இருக்கும். வயல் வெளியில் ஜில்லென ஒலி எழுப்பி பறக்கும் குட்டி குட்டி பறவைகளும், ஆங்காங்கே பூத்திருக்கும் காட்டு மலர்களும் எனக்காகவே காத்திருக்கும் தேன் பூவும், அதில் வந்தமரும் வண்ணத்துப்பூச்சிகளும் அந்த இடத்தை என் விருப்ப இடமாக மாற்றியது.
ஒரு நாள் இரண்டு கட்டு கொண்ட ஓட்டுக் குடியிருப்புகள் உருவாக ஆரம்பித்தன. சம்பிரதாயமாக இல்லாமல் ஆண் சட்டையும், பாவடையும்,
அணிந்த லேசான கருமை நிறமான பெண்களும், பறட்டை தலையும், பிளாஸ்டிக் குடங்களும், கிறீச்சிட்ட சைக்கிளோடு ஆண்களுமாக 50 குடும்பங்கள்குடியேறின. இலங்கையிலிருந்து வந்துள்ளோம் என்றனர். அங்கிருந்த யாழினி அக்கா எனது உற்ற தோழி ஆனார். அழகாக சிரித்து
அதிராமல் நடப்பார். அவர் வீட்டுக்கு எதிரே வைத்த செடி வெகு சீக்கிரம் மரமானது. அது சிவப்பு பூ பூக்கும். கொக்கி போல் வளைந்த இதழ்களை கொண்டது. மகரந்த தண்டுகள் வளர்ந்து வெளி நோக்கி தொங்கும். பார்த்தவுடன் பறிக்க ஆசையை தூண்டும். யாழினி அக்காவும் பறித்து கொடுத்தார். இது " காந்தள் மலர். எங்கட நாட்டு தேசிய பூவாக்கும் " என சிரித்த படி கொடுத்தது என் ஞாபகத்தில் கரையாமல் உள்ளது. 'ஃப்ளேம் ஆப் தி பாரஸ்ட்' பூக்களை கண்டால் அதில் யாழினி அக்காவின் அழகிய சிரித்த முகம் தெரியும்.
1984ல் நான் தேனி நகரில் குடியேறிய போது என் தோட்ட கனவு மாடி தோட்ட கனவாக உருமாறியது. எங்கள் குடும்பம் மாடியில் குடியேறயது.2000 சதுர அடியில் மொட்டை மாடி உள்ளது. மிக சிறிய அளவில் தோட்டம் அமைக்க தொடங்கிய நான் இன்று ஆயிரக் கணக்கான மரம் ,செடி ,கொடிகளை கொண்ட பெரும் தோட்டத்தை கண்டு மகிழ்கிறேன். பல வகை வண்ணத்துப் பூச்சிகளும், சிறிய பறவைகளும்,
மிருகங்களும், அவ்வப் போது வருகை புரியும் குரங்கினங்களுமாக மிக பெரிய குடும்பமாக பரிணமித்துள்ளது. என் மனைவி ரஞ்சனாவின் அயராத உழைப்பும்,கண்காணிப்பும் தோட்டத்தை மலரச் செய்துள்ளன.என் படுக்கை அறையின் அருகில் அவள் அமைத்த தாமரை தடாகம் இன்றும் பலரது புருவத்தை உயர்த்தும். அதில் மலரும் அல்லிப் பூவின் மென்மையான வாடை என் அதிகாலை பொழுதை இனிமையானதாக்கும். அதில் துள்ளி
விளையாடும் வண்ண மீன்கள் காண்போரை கவரும், என் மனதிற்கும் அமைதியை தரும்.
நூற்று கணக்கான பானைகள், தொட்டிகள், சிமெண்ட் பைகளிலும் செடிகள் வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைக்கான அனைத்து காய்கறிகளும் உண்டு. தேவைக்கு போக மீதமுள்ளவை விற்பனை செய்யப்படும். அதற்கு மவுசு அதிகம். தக்காளி, வெண்டி, கத்தரி ,மிளகாய் போன்றவை எப்போதும் உண்டு. ஊடு பயிராக இஞ்சி, பூண்டு, வெங்காயம் நடப்படும். காலப் பயிராக புடலை, பூசணி, பாகல் போன்ற கொடி வகைகளும் உண்டு.
கேரட் ,பீட்ருட், நூக்கோல், காலுபிளவர் போன்றவை கட்டுப் படுத்தப்பட்ட வெப்ப சூழலில் பயிரிடப்படும். 10க்கும் மேற்பட்ட கீரை வகைகளும் உண்டு. நிழல் வலை அமைக்கப் பட்டு,இன் -டோர், அவுட்-டோர் அலங்கார செடிகள் வளர்கப்படுகிறது. இங்கு 150 வகை அலங்கார செடிகளும், சுவர்களில் ஒட்டி வளரும் கிரீபர் இனங்களும் உண்டு. நன்றாக வெயில் படும் இடத்தில் கள்ளி இனங்கள் வளர்க்கப்படுகின்றன. 15கும் மேற்பட்ட வகை உண்டு. 10வருடமான பந்து வடிவ கள்ளி என் மனைவிக்கும், அடினா வகை கள்ளி பூ என மகளுக்கும், 25 வருட பழமையான மான் செவி கள்ளி எனக்கும் 'ஃபேவரட்.'
எனது தோட்டத்தில் முக்கனிகளின் சுவையோடு ,கொய்யா, மாதுளை, சப்போட்டா,சாத்துகுடி,சிம்லா செரி போன்றவையும்,வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் கிராம்பு, மகிழம், செண்பகம், மரிக்கொழுந்து, போன்றவையும், எலுமிச்சை, நாரத்தையும் அபூர்வ இன மரங்களான செந்தூரம் (குங்குமம் தயாரிக்க பயன்படும்), சில்வர் ஃபாலும் , காதல் உணர்வை தூண்டும் மணம் கொண்ட மகிழம் ,புன்னை, நாகலிங்கம் போன்ற மரங்களும் உண்டு. அதுமட்டுமல்லாமல் 1000வருடம் வாழும் மரங்களான ஆல், அரசு, இச்சி, போன்றவை 'போன்சாய்' வகையாகவும் உள்ளது.
இவையெல்லாம் சிமெண்ட் தொட்டிகளிலும், இரும்பு டிரம்களிலும் வளர்க்கப் படுகின்றன. முல்லை, மல்லி ,ரோஜா, கொடிசம்பங்கி ,நில சம்பங்கி
அரளி போன்ற வருவாய் தரக்கூடிய ஏராளமான பூச் செடிகளும் உண்டு.
காந்தி கிராம பல்கலைகழகத்தின் முன்னாள் ஆலோசகரும், அதன் மருத்துவ நிறுவனமான லக்ஷ்மி சேவா நிலையத்தின் வழி நடத்துனரும்,எனது பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி உயர் திரு. ஆர்.எஸ் .நாராயணன் எனது குருநாதர் ஆவார்.இவர் இயற்கை முறையில் விவசாயம் செய்வது தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் தினமணியிலும் மற்றும் நூல்களாகவும் வெளி வந்துள்ளன. இயற்கை முறையிலேயே தனது தோட்டத்திலும் விவசாயம் செய்து வெற்றியும் பெற்றிருக்கும் இவரது சீரிய வழிகாட்டலே எனது தோட்டம் செழுமை பெற முக்கிய காரணமாகும்.
தோட்டக் கலை பொறியியல் அலுவலகம் நடத்தும் பயிற்சிகளுக்கு என் தோட்டம் ஒரு களமாகவே உள்ளது. மேலும் பலரும் என்னிடம் வந்து
மாடி தோட்டம் தொடர்பாக தங்களது ஐயங்களை தீர்த்துக் கொண்டு செல்கிறார்கள், அதனால் பலனும் அடைகிறார்கள். எனது தோட்டத்தை
பார்வையிட வரும் தோட்டக் கலை அலுவலர்கள், பேராசிரியர்கள் ,மகளிர் குழுக்கள் போன்றோர் வரும் போது கேட்கும் ஒரே கேள்வி "நீர் படுவதால் தரை சேதமடையாதா? வீடு ஒழுகாதா?"என்பதே.சரியான வடிகால் வசதி செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக சேதம் அடையவே அடையாது.
இயற்கை வேளாண்மையில் சூரிய ஒளியையும், நீரையும் சரியான அளவில் பயன் படுத்தும் போது வெற்றிக் கனி நம் கையில் தவழும்.மண்புழு உரம், பஞ்ச கவ்யம், குணபம் போன்ற இயற்கை வேளாண் இடுபொருட்கள் மூலமாக செடிகளின் அத்தியாவசிய அடிப்படை தேவையை 90 சதவீதம்
வரை பூர்த்தி செய்யப் படுகிறது.பஞ்ச கவ்யமே பூச்சி கொல்லியாகவும் செயல் படுவதால் பூச்சி மருந்துகளுக்கு வேலையே இல்லாமல் போகிறது.
இயற்கை இடுபொருட்களை நாமே தயார் செய்யலாம்.சற்று உழைப்பும், பொறுமையும்,வேண்டும் ."ஆப்ரிகன் யுஜினா" எனப்படும் மண் புழுவை பயன்படுத்தி சாண எருவிலிருந்து மண்புழு உரம் 40 நாட்களில் தயாரிக்கப் படுகிறது.வீட்டில் மிஞ்சும் பால், தயிர் ,வீணாகும் சிட்ரஸ் அல்லாத பழங்கள், நெய், தேன், மண்டை வெல்லம் கொஞ்சம் சாணம், கோமியம் ,தண்ணீர் கலந்து இறுக்கமாக மூடி வைத்திட 45 நாட்களில் அற்புத சக்தி
மிக்க பஞ்ச கவ்யம் தயாராகிவிடும். அவ்வப்போது திறந்து கிளறி விடுவதால் மீதேன் வாயு வெளியேறிவிடும்.இதை 100 லிட்டர் தண்ணீருக்கு 2 முதல் 4 லிட்டர் மட்டும் கலந்து மேலுரமாகவும், அடிஉரமாகவும் உபயோகிக்கலாம்.
மண்ணின் வளமே செடியின் ஜீவ நாடி. அது சரியாக இருக்கும் போது செடி செழிப்படைகிறது. மண்ணானது கறுப்பு நிறத்தில் இருந்தால் தான் அதில் 'ஹியூமஸ் ' எனும் அங்கக சத்து முழு அளவில் இருக்கும். மாடியின் ஓரத்தில் நிழல் தர தட்டி அமைத்து அதன் கீழ் சாணம்,இலை தழை,
மிஞ்சிய உணவு பொருட்கள் ,காய்ந்த பூக்கள் போட்டு அதில் சில மண்புழுக்களை விட அவை மக்கிய தொழு உரமாக மாறும். பின் இதை செம்மண், மணல், கரம்பை மண் கலந்த கலவையோடு 1:2 என்ற விகிதத்தில் கலக்க மிகச் சிறந்த சத்து மிக்க அடி மண் தயாராகும். தொட்டிகளில் முதலில் நீர் வடிவதற்காக சிறு துளை இட வேண்டும். அதை ஓடு கொண்டு மறைத்து வடிகால் வசதி செய்ய வேண்டும். அடியில் காய்ந்த இலை சருகுகள் இட்டு அதன் மேல் மண் நிரப்பி செடிகளை நட வேண்டும். நட்ட பின் மேல் மண்ணை வைக்கோல் அல்லது ரன்னர் வகை செடிகளை கொண்டு மூடி விட வேண்டும். இதுவே "மல்ச்சிங்" அதாவது மூடாக்கு எனப்படும்.
யானைகளைப் போல் குரங்குகளுக்கும் 'வலசை' பாதை உண்டு. அதன் பாதைக்கு அருகில் அவை உண்பதற்காக தக்காளி, பப்பாளி, கொடுக்காபுளி போன்றவற்றை வைத்து விட்டால் அவை அதை மட்டும் உண்ணும், மற்ற செடிகளை அவை சேதமாக்காது. அதுபோல கர்ப்ப காலத்தில் உள்ள அணில் ,பறவைகள் போன்றவைக்காக செடிகளை ஒதுக்கி வைத்து விட்டால் பிற செடிகளை அவை பாழாக்காது. செரிவூட்டப்பட்ட இயற்கை உரங்களை அளிக்கும் போது பெரு மரங்கள் அதிக காய்ப்புத் திறனை பெறுகிறது.
1947 ஜூலை மாதம் முதன் முதலில் மரம் நடும் வாரம் தொடங்கப்பட்டது. தில்லியில் உள்ள புரானாக்கிலா மைதானத்தில் செம்மந்தாரை மரக் கன்றுகளை நட்ட பின் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு " வளரும் மரங்கள் நாட்டின் உயிர்துடிப்பின் சின்னம், மரம் வெட்டுவதை தடுக்க சட்டம் வேண்டும், ஒருமரத்தை நட்ட பின்தான் பட்ட மரத்தை வெட்ட வேண்டும்" என்று கூறினார்.
மண்ணும் மரமும் நம்மை ஒருபோதும் ஏமாற்றாது .இயற்கை அளித்த அட்சய பாத்திரங்கள் செடிகள். அதை நாம் என்றும் பேணிக் காத்திட வேண்டும். தினமும் யோகா, உடற் பயிற்சி செய்தல், கோவிலுக்கு செல்லுதல் போன்றவற்றோடு செடிகளை வளர்ப்பதற்கும் நம் அன்றாட வாழ்வில் இடம் தர வேண்டும்.அறம், பொருள், இன்பம், வீடு என்ற மனித நெறிகளை மரங்கள் வழங்குகின்றன.இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் மரங்களை நட வேண்டும். இந்த பூமியில் அவைகள் எல்லையில்லா மகிழ்ச்சியை வழங்குகின்றன. அவை நம்மை வறுமையிலிருந்தும் காக்கின்றன.
அதனால் "ரட்சகன்"என்று அவைகள் அழைக்கப் படுகின்றன. ஆனால் இன்றைய இயந்திர உலகில் நிஜப் பூக்களின் வாசனையை நுகர
நேரமில்லாமல் பிளாஸ்டிக் பூக்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் சுவற்றில் ஒட்டி அழகு பார்த்துக் கொண்டு சொர்க்கத்தை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம். என்னிடம் சொர்க்கம் எங்கே என்று கேட்கும் போதெல்லாம் என் பதில், " என் வீட்டு மாடியில்".
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.

No comments:

Post a Comment