Saturday, August 29, 2020

 தளர் நடை போடும் சிங்க ராஜாக்கள்





பல கானுயிர் ஆர்வலர்களும் ,வன ஆராய்ச்சியாளர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ,மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் ,குஜராத் மாநில முதல்வரிடம் ஒரு கோரிக்கை விடுத்தார். அம்மாநில கிர் காட்டில் வசிக்கும் சில சிங்கங்களை பிடித்து வேறு மாநில காடுகளில் வளர்த்து பெருக்குவது என்பது அவரது கோரிக்கையின் சாரம். கோரிக்கையை கண்டவுடன் கடும் கோபம் கொண்டார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. "என் மாநிலத்தின் தனித்தன்மையை பிறரிடம் அடகு வைக்கக் கூறுகிறீர்களா ? இது குஜராத்தின் சொத்து. இந்துத்துவத்தின் அடையாளச் சின்னம்." என ஏதேதோ, பொறுந்தாத விளக்கங்களைக் கூறி, ஒரு சிங்கத்தை கூட ,தன்னால் அனுப்ப இயலாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். பிரதமர், இறுதியில் தெளிவான காரணங்களைக் கூறி கேட்டுக் கொண்ட போதும் "முடியவே முடியாது" என ஒற்றைக்காலில் நின்று விட்டார்! நரேந்திர மோடியின் செயல்குறித்து மிகச் சிறந்த வன உயிரி மற்றும் சுற்றுச் சூழல் எழுத்தாளரான வால்மீக் தாபர் " எந்த அரசியல் வாதிக்கும் ,சுற்றுச் சூழல் குறித்தோ, வன உயிரிகள் குறித்தோ போதுமான அறிவு கிடையாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவற்றை அழித்து தங்கள் பர்சை எப்படி நிரப்பிக் கொள்ளலாம் என்பது தான். இந்த சந்தர்ப்பத்தில் மோடியைப் பற்றி கூற ஒன்றுமில்லை. அவரும் அரசியல் வாதிதானே! மேலும் அறியாமை என்ற தகுதியும் கூடவே பொறுந்தப் பெற்றவர்." என விமர்சிக்கின்றார்.
உண்மையில் கிர் காட்டில் சிங்கங்கள் உள் குடும்ப உறவுகளுக்குள்ளேயே ஜோடி சேர்வதால் மரபணு சிதைவுக்கு உட்பட்டு ,உடல் குறையுடைய ,சத்து குறைவான சந்ததியை உருவாக்குகின்றன. அவை வெகு வேகமாக தங்கள் உயிரை இழக்கவும் செய்கின்றன. இதை மனதில் கொண்ட ஆய்வறிஞர்கள் ,பிற மாநிலத்தில் உள்ள சிங்கங்களோடும் ,அல்லது மிருக காப்பகங்களில் வளர்க்கப்படும் சிங்கங்களோடும் உறவு கொள்ள வைக்கும் போது, வேற்று குடும்ப உறவாகிப் போவதால் நல்ல சத்தான குட்டிகள் பிறக்க வாய்ப்பு உண்டு. எண்ணிக்கையும் பெருகும் சாத்தியம் அதிகம் உள்ளது என கூறினர். இதை வனத்துறை அமைச்சரும் ,பிரதமரும் ஏற்றுக் கொண்டாலும் ,மோடி "கெளரவம்" பார்த்து ஏற்க மறுத்து விட்டார்.
2010 கணக்குப்படி கிர் காட்டில் 411 சிங்கங்கள் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆசிய சிங்கங்களின் பாரம்பரியம் ,ஆப்பிரிக்காவில் இருந்து துவங்குகிறது. ஆசிய சிங்கங்கள் ஆப்பிரிக்க சிங்கங்களைக் காட்டிலும் நிறத்திலும் ,உருவத்திலும் சற்று வேறுபடுகிறது. ஆப்பிரிக்க சிங்கங்களில் ஆண் சற்று பெரியதாகவும், பிடரி மயிர் அதிகமாகவும் ,சற்று கறுப்பு நிறம் கூடுதலாகவும் இருக்கும். ஆசிய சிங்கத்தின் ஆண் ,சற்று உருவில் சிறியதாகவும், பிடரி மயிர் வெளுத்து, கறுப்பு நிறம் குறைவாகவும் காணப்படும். ஆண் 190--210 கிலோ எடையும், பெண் 120--150 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும். இவை குழுவாக வாழும். ஆங்கிலத்தில் இதை "pride" என அழைக்கிறார்கள். ஒரு குழுவில் குறைந்தது 6 சிங்கங்கள் இடம் பெற்றிருக்கும். அதில் 2 ஆணாக இருக்கும். சில ஆசிய சிங்கக் குழுவில் ஆணின் பங்களிப்பு என்பது மிகக் குறைவாகவும் ,சில சமயம் இல்லாமலேயே கூட இருக்கும் . ஆசிய பெண் சிங்கங்கள், ஆண்களை கலவியில் ஈடுபடும் காலத்தின் போதோ ,அல்லது பெரும் இரையை வீழ்த்தும் பொருட்டு  மட்டுமே அனுமதிக்கிறது. இவ்வாறான குணம் இரையின் பற்றாக்குறையால் ஏற்பட்ட குணமாறுதல் என சிங்கத்தின் மனநிலையை ஆராய்ந்த டாக்டர். புரூக் கூறுகிறார். சிங்கங்கள் தங்கள் விருப்ப உணவாக மான், கலைமான், காட்டுப் பன்றி மற்றும் மேய்ச்சலில் உள்ள ஆடு, மாடுகளை அடித்துண்ணும்.
சிங்கங்களின் பால் அதிக ஆர்வம் கொண்ட ஜூனாகத் நவாப், கிர் காட்டை உருவாக்கினார். அப்போது அக்காட்டில் வெறும் 13 சிங்கங்கள் இருந்தன.தற்போது   ,புலி, சிறுத்தை, கழுதைப்புலி, போன்றவையும் சேர்ந்து வாழ்வதால், அதிக உணவுப் பஞ்சம் ஏற்படுகிறது. இதன் பொருட்டு சிங்கங்கள் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை தாக்குகின்றன. தவிர காடுகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவதும், ஆக்கிரமிப்பாளர்கள் சட்ட விரோதமாக அமைத்த மின்சார வேலிகள், தாங்கள் பயிரிட்ட பயிர்களை மான்கள் அழிக்காமல் பாதுகாக்க என கூறப்பட்டாலும், அதில் மான்களைவிட சிங்கங்களே அதிகம் சிக்கி இறந்து போகின்றன. இது தவிர சுற்றுச் சுவர் இல்லாமல் தோண்டப்பட்ட கிணறுகளில் தவறி விழுந்தும் இறந்து போகின்றன. சிங்கங்களை போன்று,இன்று அழிவின் விளிம்பில் உள்ள கலைமான், சிறுத்தை, போன்றவைகளும் கிணறுகளில் விழுந்து விடுகின்றன. சென்ற 2010 ஆண்டு மட்டும் 20 கலைமான், 4 காட்டுப் பன்றி, 2 சிறுத்தை, 1 புலி, 3 சிங்கங்கள் இறந்து கிடந்தன.
கிர் காடுகளில் "மால்டு ஹாரில்" நாடோடிகள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போதும் 5 அல்லது 10 பேர் கொண்ட குழுக்களாகவே வசிப்பர். ஒவ்வொரு குழுவும் 50 முதல் 100 கால்நடைகளை தங்கள் வசம் வைத்து வளர்க்கின்றனர். மேய்ச்சலுக்காக காடுகளுக்குள் செல்லும் இவை புற்கள், சிறு கிழங்குகளை அதிக அளவில் உண்பதால் காடுகளில் வாழும் பிற புல் தின்னும் ஜீவராசிகள், கடும் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. இதனால், இவை இறந்து போகும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இதை மட்டுமே நம்பி வாழும் ,சிங்கம், புலி ,சிறுத்தை போன்றவை, நிர்பந்தத்தின் காரணமாக நாடோடிகளின் கால்நடைகளை தாக்குகின்றன. கோபம் கொண்ட அவர்கள் புலால் உண்ணிகளுக்கு மாமிசத்தில் நஞ்சு கலந்து கொன்று விடுகின்றனர். இதில் ஒரு வினோதம் என்ன வென்றால், இந் நாடோடிகள் சிங்கங்களை தெய்வமாக கருதுகின்றனர். தவிர புலால் உண்பதும் இல்லை. வனத்துறை தனிப்படை அமைத்து அவர்களிடம் பேசி சமாதானம் செய்துதனி இடம் ஒதுக்கித் தந்து காடுகளிலிருந்து வெளியேர கட்டாயப்படுத்தினாலும் முழுமையாக வெளியேற மறுக்கின்றனர். சிலர் சட்ட விரோதமாக காடுகளுக்குள் புகுந்து சொந்தம் கொண்டாடுகின்றனர். எதிர் கட்சிகள் இதை அரசியல் ஆக்கிவிடுமோ என மாநில அரசு அஞ்சுகிறது. தர்ம சங்கடத்தோடு இப்பிரச்சினையை தீர்வை நோக்கி செலுத்தாமல், ஏனோ தானோ வென்று கையாள்வது சிங்கங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது.


பிரிட்டிஷ் ஆட்சிகாலம் ,பின் மகாராஜாக்களின் காலத்தில் சிங்க வேட்டை என்பது பொழுது போக்கு அம்சம். இதனால் சிங்கங்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைக்கப்பட்டு , அவை தங்கள் இனத்துக்குள் கலவி புரிந்து சத்து குறைவான இனத்தை உருவாக்க 14 வருடம் வாழும் ஒரு ஆண்சிங்கம் 5 வருடத்தில் நோயால் இறந்து போனது. பொதுவாக சிங்கங்கள் 10--12 வருடங்கள் உயிர் வாழும். ஆணை விட பெண் சற்று சிறியதாக இருக்கும். மணிக்கு 81 கி. மீ வேகத்தோடு ஓடும் சிங்கங்களால் சில மீ தொலைவே இந்த வேகத்தை கடைபிடிக்க முடியும். எல்லா மிருகத்தையும் உணவாக உட்கொள்ளும் சிங்கங்கள் ,பற்றாக்குறை காலத்தில் பறவை பூச்சி இனங்களை கூட உட்கொள்ளும். கடும் பஞ்சம் நிலவும் போது ,யானை குட்டி, ஒட்டகக் குட்டி ,நீர் யானை போன்றவற்றையும் தாக்கும். இவை உண்பதைக் காட்டிலும் , ஹைனா என அழைக்கப்படும் கழுதைப்புலி ,பிணந்தின்னிக் கழுகுகள் போன்றவைகளின் வரம்பு மீறிய தலையீட்டின் காரணமாக இரையை விட்டுக் கொடுத்து விட்டு செல்லும் பரிதாப நிலையே அதிகம் நேரும். அப்போது கடும் கோபம் கொள்ளும் ஆண் சிங்கங்கள் கர்ஜிக்கும் குரலின் ஒலி யின் அலைவரிசை 5 கி.மீ தொலைவு வரை கேட்கும். சற்று கட்டை குரலோடு இடைவெளி இருக்கும். பெண்ணோ ஓரிரு முறை மட்டுமே இவ்வாறு கர்ஜிக்கும். அப்போது எதிர்படும் எதையும் கண்மூடித்தனமாக தாக்கத் தயங்காது.
பூனை குடும்பத்தை சேர்ந்த சிங்கங்கள் நல்ல குடும்ப அமைப்பை பேணுபவை. உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான நட்பு இருக்கும். மகிழ்ச்சிகரமான தருணங்களில் உடலோடு உடல் ஒட்டி உரசுதல் ,நக்குதல், செல்லமாக கடித்தல், முன் கால்களால் வலிக்காமல் அறைதல் ,தலைகீழாக படுத்து கால்களை விரித்தல், என பல மொழிகளில் அன்பையும், உணர்வையும் வெளிப்படுத்தும். வருடம் முழுவதும், கலவியில் ஈடுபடும் சிங்கங்களில் "ரொமான்ஸ்" தன்மை மிகவும் குறைவு. பெண் தயாரான நிலையில் மட்டுமே ஆணை உடலுறவுக்கு அனுமதிக்கும். அந்நிகழ்வும் நம் பார்வைக்கு சற்று முரட்டுத் தனமாகவே இருக்கும். பெண் கீழே அமர ,ஆண் மேலமர்ந்து பெண்ணின் பிடரியை கடித்தவாறு உறவு கொள்ளும். உறவு நிகழ்வு   சில மணித்துளிகளே நிகழும். பல முறை இவ்வாறான நிகழ்வுகள் அரங்கேறும். பல சமயம் "உறவு வலி" தாளாமல் ஆணை தாக்க முற்படும்.சரியான ஒத்திசைவு இல்லாத போது ஆணும் பெண்ணை தாக்கும். பெண்ணின் கர்ப்ப காலம் 110 நாட்கள். 3--4 குட்டிகளை ஈனும் பெண், அவைகளுக்கு 2 வயதாகும் வரை தனது பராமரிப்பிலேயே வைத்திருக்கும். ஆண் உணவை தேடுவதைக் காட்டிலும், தன் எல்லையை பாதுகாப்பதிலும், பெருக்குவதிலும் அதிகம் கவனம் செலுத்தும். சிறு நீரை ஆங்காங்கே பீய்ச்சி " குறியீடு" செய்யும். பெரும்பாலும் பெண்ணே அதிகம் வேட்டையில் ஈடுபடும். புல், புதர், முட்புதர், குற்று மரங்கள், பெரும் மேடாக காட்சி தரும் கரையான் புற்றுகள், பாறைகள் நிரம்பிய தனித்த பகுதி போன்றவைகளை தன் வாழ்விடமாக இவை தேர்வு செய்கின்றன. 11 மாதத்தில் தன் முதல் வேட்டையை துவங்கும் குட்டிகளுக்கு ,சிறுத்தைகள், கழுதைப்புலி, நரி, மாற்று குழுவைச் சேர்ந்த ஆண் சிங்கங்களின் வடிவில் பெரும் ஆபத்துக்கள் ஏற்படுகின்றது. பல சமயம் குட்டிகளின் உயிரிழப்பில் இவை முடிவடைகிறது.
தட்ப வெப்ப மாறுதல், சுற்றுச் சூழல் சீரழிவு போன்றவை எண்ணிக்கையை வெகுவாக குறைக்கின்றன. வறட்சி காலத்தில், சிங்கங்கள் அதிக தொற்று நோய்களுக்கு ஆளாகும். 1990---2001 வரை ஆப்பிரிக்காவில் அதிக சிங்கங்கள் இறந்து போயின. வறட்சி காலத்தில் பிறக்கும் குட்டிகள் அதிக சத்து குறைபாடு கொண்டதாகவும், தொற்று நோய் வைரஸ்களை தனது மரபணுவில் சுமந்தும் வருவதால் உடனடி இறப்போ ,அங்கஹீனமோ ஏற்படுகிறது. இது மனிதன் எய்ட்ஸ் நோயால் இறந்து போவதற்கு ஒப்பானது என்கிறார் வால்மீக் தாபர். சிங்கங்கள் 90% மனிதக் கொல்லி அல்ல. வயதானவை, பற்கள் தேயுற்றவை, கிட்டத்தட்ட வேட்டையாடும் திறனை இழந்து, பார்வைக்குறைவு ஏற்பட்டு குடும்பத்திலிருந்து அன்னியப்படுத்தப்பட்டவை, மனநிலை பிறழ்வுற்றவை போன்றவையே மனிதனை தாக்கி உண்பதாய் ஆராய்ச்சியாளர் ஜெஃப் கார்வின் கூறுகிறார்.
சிங்கங்கள் பெரும்பாலும் தங்கள் நாட்களை ஓய்வு எடுப்பதில் கழிக்கின்றன. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கும். அதே சமயம் தேவைக்கேற்ப ஒரு நாள் முழுதும் வேட்டையிலும் களமிறங்கும். சுமாராக, ஒரு ஆய்வுப்படி ,ஒரு நாளில் 2 மணி நேரத்தை நடையிலும், 50 நிமிடங்களை உணவு உண்பதிலும் செலவிடுகிறது. சிங்கங்களின் அழிவை ஆராய்ந்த விஞ்ஞானிகள் சோதனைச் சாலையில் சில சிங்க வகைகளை உருவாக்கினர். அவை "Barbary Lion","Cave Lion" என அழைக்கப்படுகின்றன. இத்திட்டம் பெரும் தோல்வியில் முடிவடைந்தது. இச்சிங்கங்கள் காப்பகங்களில் மட்டுமே வைத்து வளர்க்கப்படுபவையாகவும், காட்டு சிங்கங்களில் இருந்து மாறுபட்ட உருவ அமைப்பு ,குணம், நிறம், பாலுணர்வு தன்மை கொண்டவையாகவும் இருக்கிறது. கென்யா, டான்சானியா போன்ற நாடுகளில் காப்பகங்களில் இவ்வகையினம் காப்பாற்றப்படுகிறது. இங்கு ஆண் சிங்கத்தையும், பெண் புலியையும் இணை சேர்த்து புதிய இனத்தையும் உருவாக்கி, "லைகர்" என பெயரிட்டனர். இவையும் தோல்வியான ஒரு முயற்சியே!
தற்போது ஆப்பிரிக்கா ,ஆசியாவில் மட்டுமே காணப்படும் சிங்கங்கள் வட அமெரிக்கா, கீழ்திசை கிழக்கு நாடுகள் ,மத்திய கிழக்கு நாடுகள் ,யுரேசியா, வடக்கு ஐரோப்பா ,பெரு என விரிந்து பரந்த சாம்ராஜ்ஜியத்தில் உலா வந்தவை. தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டு ,ஒரு குறுகிய நிலப்பரப்பில் ,குறைந்த எண்ணிக்கையில் உலாவந்து, வரலாற்றுப் பதிவாக மட்டுமே இடம் பெற்றுள்ளன.
மனித வாழ்வோடு அதிகம் இணைத்து பேசப்படும் ஒரு மிருகமாய் ஆண் சிங்கங்கள் திகழ்கின்றன. அவனது இலக்கியம், ஓவியம், நாட்டுச் சின்னம், பொழுதுபோக்கு அம்சங்கள், தன் குணம், தன் வாரிசின் குணம், பிறப்பு, நடை, என அனைத்திலும் சிங்கத்தை ஒப்பிட்டு பார்க்கும் மரபை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறான ஒப்பீட்டுத் தன்மை உலக நாடுகள் அனைத்திலும் காணப்படுகிறது. சிங்கத்திற்கு அடுத்து யானை அதிகம் ஒப்பீட்டுக்கு உள்ளாகி வருகிறது. பறவைகளில் மயிலும், கிளியும், மலர்களில் தாமரையும், அல்லியும் அதிகம் இடம் பெறுகின்றன.இந்தியாவில் பரதத்தின் உச்சக் கட்ட திறன் ஆடிக் கொண்டே ,தன் கால்களால் வண்ணப் பொடி கொண்டு சிங்கத்தை ஓவியமாய் தீட்டிக் காண்பிப்பது தான்!
kannan233@gmail.com       எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

படங்கள் உதவி இணையம்

No comments:

Post a Comment